(17 ஏப்ரில் 2004, அல்-ஜாமிஆ மஸ்ஜித்,
கிளேர்மாண்ட், கேப் டவுன், தென் ஆப்ரிகா)
அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி அஷ்-ஷாதுலி
இதுவரை நாம் செய்து வந்ததெல்லாம்
மெல்ல மெல்ல காலடி எடுத்து வைத்ததுதான். நாம் நிகழ்த்திய ஒவ்வொரு கூடுகையும் மேலும்
ஒரு காலடி வைப்பு, அவ்வளவுதான். இது ஒரு தவணை முறையான முன்னகர்வு, நாம் பிரித்துப்
போட்டிருக்கும் விடயங்களை ஒன்று சேர்ப்பதற்கான இன்னொரு கூடுகை.
ஹஜ்ஜு அப்துல் ஹக் அவர்கள் சொன்ன வியாக்கியானம் ஒன்றைச் சென்ற
வாரம் நான் குறிப்பிட்டேன். அவரின் புரிதல் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது
என்றும் சொன்னேன். அந்த மகான் சொன்னார்கள்: “வஹ்ஹாபிகள் தாம் பிரகடனம் செய்யும் தவ்ஹீதில்
‘ஒன்று’ என்று ஆரம்பிக்கிறார்கள், ஆனால் இரண்டு என்பதில் முடிகிறார்கள். நீங்கள் சொல்வதிலோ
இரண்டு என்பதில் ஆரம்பிக்கிறீர்கள், ஒன்றில் முடிகிறீர்கள்.” எனவே நாம் தஹ்வீத் பற்றிய
முழுமையான புரிதலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் படிப்படியாகத்தான்
போக வேண்டும். ஏனெனில் நாம் தரீக்கா என்னும் ஆன்மிக நெறியுடைய மக்களின் தவ்ஹீதைப் பற்றிப்
பேசுகிறோம். அவர்கள்தாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடமிருந்து நேரடியாக வருகின்ற
இல்முல் லதுன்னீ என்பதை அடைவதற்கான பாதையில்
இருப்பவர்கள். அதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிடக் கூடாது.
அடிப்படைகள் அனைத்தும் ஸூஃபிகள் தமது இலக்கை அடைவதற்கான கருவிகளாகவும்
தொழில்நுட்பச் சாதனங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவர்கள் தம் பாதையில் அம்மணமாக நடப்பதில்லை.
அது தவாஃப் மாதிரி – ரசூல் (ஸல்லல்லாஹு
அலைஹி வ சல்லம்) அவர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் கஃ’பாவைச் சுற்றி அம்மணமாக
நடந்தார்கள். ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) வந்தபோது அவர்கள் தவாஃபை ஒழிக்கவில்லை,
ஆனால் மக்களுக்கு ஆடை சூட்டிவிட்டார்கள், ஆடை அணிவதன் கண்ணியத்தை அவர்களுக்கு வழங்கினார்கள்.
தவாஃப் என்னும் அமைப்பு அப்படியே தொடர அனுமதித்தார்கள். இஸ்லாம் என்பது கலாச்சாரமன்று,
அது கலாச்சாரத்தைத் தூய்மை படுத்துவது. அதே வழியில், நாம் தேடும் இந்த அறிவுக்கு, நீங்கள்
இந்த தக்வா மற்றும் இந்த பிர்ரு ஆகியவற்றால் ஆடை சூட்டப்படுகிறீர்கள். சரியான செயல்முறைகள்
கொண்ட இந்தப் பாதையில் நீங்கள் மஃ’ரிஃபத்துல்லாஹ் என்னும் கண்ணிய ஆடை சூட்டப்படும்
இடத்தை அடைகிறீர்கள்.
எடுத்துக்கொண்ட விடயத்தை நாம் தொடர்ந்து
காண்போம். சென்ற வாரம் நான் இதன் அடுத்த கட்டத்தில் நிறுத்தினேன், அது சூரத்துல் ஹதீத்
(57:4): வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தவன் அவனே,
பின்னர் அவன் அர்ஷ் (பேராசனம்) மீது அமைந்தான். நாம் இதை மீண்டும் கவனிப்போம், ஏனெனில் இது நமக்கு ஒரு
தொடர்ச்சியை வழங்குகிறது: வானங்களையும்
பூமியையும் ஆறு நாட்களில் படைத்தவன் அவனே. நினைவில் வையுங்கள், இங்கே
சொல்லப்படும் ஆறு நாட்கள் என்பதை வெளிப்படையான கணக்கில் எடுக்காதீர்கள். இது
உலகத்தைப் படைத்தலின் நோக்கில் ஒரு பகுதியாகும். குர்ஆனின் இன்னோரு திருவசனம் இது
பற்றி சமிக்ஞை காட்டுகிறது, ஒரு நாள் என்பது மிக அதிக நீண்ட காலமாகும். வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில்
படைத்தவன் அவனே, பின்னர் அவன் அர்ஷ் (பேராசனம்) மீது அமைந்தான் – அப்புறம்
பிரபஞ்ச எதார்த்தம் முழுமையும் இருப்புக்கு வந்தது.
வானங்களையும் பூமியையும் ஆறு
நாட்களில் படைத்தவன் அவனே,
பின்னர் அவன் அர்ஷ் (பேராசனம்) மீது
அமைந்தான்.
பூமிக்குள்
செல்வது என்ன, அதிலிருந்து வெளியாவது என்ன,
வானிலிருந்து இறங்குவது என்ன, அதனிடம்
மேலேறுவது என்ன
என்பதை அவன் அறிகிறான்.
நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்,
நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறான்.
இந்தத் திருவசனத்தை நாம் கவனிப்பதன் முக்கியத்துவம் என்ன
என்றால் அல்லாஹ் தன்னைப் பற்றி வெளிப்படுத்தும் இரண்டு விதமான அறிவுகள் இதில்
ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பதாகும். இதுதான் நாம் எடுத்து வைக்கும் அடுத்த
காலடி.
இந்த
ஆயத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) தன்னை முழுப் பிரபஞ்ச
எதார்த்தத்தையும் படைத்த ஒருவன் என்று பிரகடனம் செய்கிறான். ஆனால் இதன் அடுத்த
நிலையாவது: ”பூமிக்குள் செல்வது என்ன,
அதிலிருந்து வெளியாவது என்ன, வானிலிருந்து இறங்குவது என்ன, அதனிடம் மேலேறுவது என்ன
என்பதை அவன் அறிகிறான்.” எனவே அவனிடம் தொடர்படியான அறிவு ஒன்று இருக்கிறது.
இருத்தலின் தொடர்ச்சியான இயல்பில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) நிகழும்
அனைத்தையும் அறிகின்றான். இறைவன் என்பவன் அனைத்தையும் நடக்க வைக்கிறான், அத்துடன்
அவன் வேலை முடிந்தது என்னும் தொல்குடிக் கருத்து அல்ல இது, அஸ்தக்ஃபிருல்லாஹ்!
(அல்லாஹ் மன்னிப்பனாக!) வாழ்விற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் உள்ளடக்கியது தன்
அறிவு என்று அல்லாஹ் விளக்குகிறான். இதனைக் குறிக்கவே, குர்ஆனில் வேறோரு
பொருண்மையில் இருந்து “றப்பு” என்னும் சொல்லினடியாகக் கிளைக்கும் “ருபூபிய்யத்”
என்னும் சொல்லினை நாம் எடுத்திருக்கிறோம்.
ருபூபிய்யத்
என்பது இருத்தலின் உள்தொடர்பு கொண்ட அம்சங்கள் அனைத்தின் மீதுமான தெய்வீகக்
கட்டுப்பாடு ஆகும் – எப்படி வேதிப்பொருக்டள் ஒன்றிணைந்து வேறு வேதிப் பொருட்களை
உண்டாக்குகின்றன, தனிமங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்துறவாடுகின்றன, எப்படி ஒரு
காட்டில் மரங்களின் உச்சிக் கொப்புகள் முதல் வேரிலிருக்கும் உயிரிகள் வரை, ஒவ்வொரு
உயிரியிலும் தான் வாழ்வதற்காக இன்னோர் உயிரியை உண்ணும் ஆற்றல் இருக்கிறது – இவை
அனைத்தும் இந்த ருபூபிய்யத்தால்தான் ஒன்றிணைக்கப்பட்டு உறவாட்டப்படுகின்றன.
நாம்
இப்போது கடைசிப் பகுதிக்கு வருகிறோம். இது நமக்கு மிகவும் முக்கியமானது.
நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன்
இருக்கிறான்,
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்
பார்க்கிறான்.
இது அல்லாஹ் நமக்கு வழங்கும் புதிய
அறிவாகும். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன: இதில் “ஐன மா” இருக்கிறது. இது
இடத்தைக் குறிக்கிறது. எனவே அது எங்கே நிகழ்கிறது என்னும் இடத்தை அல்லஹ்
அறிகிறான். மற்றது, ‘குன்-தும்”, “நீங்கள் இருப்பது.” இது காலத்தைக் குறிக்கிறது.
மனிதனின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதன் இடம் மற்றும் காலம் ஆகியவற்றை அல்லாஹ்
அறிகிறான்.
நீங்கள் செய்வதை அல்லாஹ்
பார்க்கிறான். முஃபஸ்ஸிரீன் (என்னும் விரிவுரையாளர்கள்) அவதானிப்பது போல், அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா) அல்லாஹ் ”அறி”வது என்னும் சொல்லினை இங்கே பயன்படுத்தவில்லைல்.
இதற்கு முந்தைய நிலை பற்றிப் பேசும்போது அச்சொல்லினைப் பயன்படுத்தினான். ஆனால்,
“நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்” என்பது பிரசன்னம் ஆகும்.
மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறான். “பார்த்தல்” என்பது “பஸீர்”
என்னும் சொல்லில் இருந்தாகும், அது கண்ணால் பார்த்து சாட்சி பகர்தல் என்ப்தற்கான
வினைச் சொல் ஆகும். பார்த்து சாட்சி சொல்வதற்கு நீங்கள் அங்கே இருந்தாக வேண்டும்.
நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறான்.
பஸீர் என்பது பார்வை சாட்சி. எனவே,
இதிலிருந்து, அல்லாஹ் நம்மைப் பார்க்கும் சாட்சியாக இருக்கிறான், இது ஒரு
பார்த்தல் என்னும் அறிவை அடைகிறோம்.
இவர்கள் மனிதர்களை விட்டும்
மறைக்கின்றனர்; ஆனால் அல்லாஹ்வை விட்டும் மறைக்கவியலாது. அவன் பொருந்திடாத
பேச்சால் இரவெல்லாம் அவர்கள் ஆலோசிக்கும்போதும் அவன் அவர்களுடன் இருக்கிறான்;
மேலும், அல்லாஹ் அவர்களின் செயற்பாடுகளைச் சூழ்ந்தவனாக இருக்கிறான் (குர்’ஆன்
4:108)
குர்’ஆன் என்பது ஒரு வெளிப்பாடு என்பதாக மக்கள் பேசுகின்றனர்.
அது வெளிப்பாடாகத்தான் இருக்கிறது
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்! வெலிப்பாடு என்பது குர்’ஆனின் இறக்கமன்று.
அக்கணம் வரை அறியப்படாதிருந்த தனது ரகசியங்களை அல்லாஹ் வெளிப்படுத்துவதுதான் அது.
அவன் நம்மிடம் வெளிப்படையாகச் சொல்கிறான் – இது குர்’ஆனுல் முபீன், இது தெளிவான
செய்தி. வெளிப்பாடு என்ன என்றால் மனிதப் படைப்பினம் அடைய வேண்டும் என்று அவன்
விரும்புகின்ற தனது அனைத்து ரகசியங்க்ளையும் அல்லாஹ் காட்டித் தருகிறான்.
அவர்களுக்கு அவன் அவற்றை இந்த வேத நூலில் தருகிறான்.
மனிதர்களில் சிலர் தம்மை மனிதர்களை
விட்டும் மறைத்துக்கொள்ள முயல்கின்றனர் என்று இங்கே சொல்கிறான். வேறு விதத்தில்
சொல்வதெனில், இந்த நபர்கள் ஏற்கனவே தம்மை மறைத்துக்கொள்ளும் செயலில்
இருக்கின்றனர். ஆனால் வேத வெளிப்பாடு சொல்கிறது: “அல்லாஹ்வை விட்டும் அவர்கள்
தம்மை மறைத்துக்கொள்ள முடியாது.” வேறு சொற்களில் கூறுவதெனில், நீ உன்னை மக்களை
விட்டும் ஒளித்துக்கொள்ளலாம், ஆனால் அல்லாஹ்வை விட்டும் ஒளித்துக்கொள்ள முடியாது.
எதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் சுட்டுகிறது. தன்னை
வைத்திருப்பவனை இந்த அறிவு மாற்றிவிடுகிறது. இதை அறிந்தவன் இதை அறியாதவனைப்
போன்றவன் அல்லன். இதை அறியாதோரே மக்களை விட்டும் தம்மை மறைத்துக்கொள்ள
முயல்கின்றனர். இதுதான் குஃப்ரு – என்ன
நடக்கிறது என்பதை அவர்கள் மூடி மறைக்கிறார்கள், ஆனால அல்லாஹ்விடம் அவர்கள்
காஃபிராக இருக்க முடியாது, அவர்கள் அதற்கு முயல்கிறார்கள், ஆனால் அவர்களால் அதைச்
செய்ய முடியாது ஏனெனில் அல்லாஹ் நடப்பவை அனைத்தையும் அறிகின்றான்.
அப்புறம் அல்லாஹ் சொல்கிறான்:
அவன் பொருந்திடாத பேச்சால் இரவெல்லாம்
அவர்கள் ஆலோசிக்கும்போதும்
அவன் அவர்களுடன் இருக்கிறான்; மேலும்,
அல்லாஹ் அவர்களின்
செயற்பாடுகளைச் சூழ்ந்தவனாக
இருக்கிறான் (குர்’ஆன் 4:108)
இதன் எதார்த்தத்தை நீங்கள் பார்க்கவில்லையா? மக்கள் உண்மையில்
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுக்கு எதிராக, அவன் விரும்புகின்ற விடயங்களுக்கு
எதிராகச் சதித்திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஏதோ அல்லாஹ்வுக்கு
எதிராக ரகசியமாகத் திட்டம் தீட்டுவது போல் அதைச் செய்கின்றனர். அல்லாஹ்
சொல்கிறான்: “அவன் அவர்களுடன் இருக்கிறான்.” இந்த “அவர்களுடன்” என்பது
பிரசன்னமாகும்.
மேலும், அல்லாஹ் அவர்களின்
செயற்பாடுகளைச் சூழ்ந்தவனாக
இருக்கிறான்
இது ஏதோ உளவியலானதோ மாயாஜாலமோ அல்ல.
ஆனால், அவர்களின் செயற்பாடுகள் முழுவதையும் அடைய வளைந்திருக்கும் ஒரு
பிரசன்னமாகும். இன்று நாம் எப்படிச் செய்திகளை அடைகிறோம் என்பதில் இதைப்
பொருத்திப் பாருங்கள். இராக் பற்றிய செய்தியை, அஃப்கானிஸ்தான் பற்றிய செய்தியை
நீங்கள் பெறுகிறீர்கள். மக்களை விட்டும் தம்மை மறைத்துக்கொள்ள முயலுகின்றவர்களும் இரவெல்லாம்
அல்லாஹ்வுக்குப் பிடிக்காத விடயங்களைப் பேசுபவர்களுமான குஃப்பார்களால் அந்தச்
செய்தி உங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் “மேலும்,
அல்லாஹ் அவர்களின் செயற்பாடுகளைச்
சூழ்ந்தவனாக இருக்கிறான்” என்று அல்லாஹ் சொல்கிறான். சூழ்நிலை மீது அல்லாஹ்
கொண்டிருக்கும் முழுமையான கட்டுப்பாட்டின் வெளிச்சத்தில் நாம் இதைப் பார்க்க
வேண்டும். உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவனே மிகச் சரியாக
அறிகிறான். அவன் நமக்குச் சொல்வது என்னவென்றால் அவர்களுடன் அவன் இருக்கிறான்
என்பதே. அதுதான் பிரசன்னம் ஆகும்.
நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டும். சென்ற நூற்றாண்டில் இஸ்லாமை முற்றிலும் தவறாகப் போதித்த
நிலை இருக்கிறது. நாம் அலசிக் கொண்டிருக்கும் இந்தத் திருவசனங்களை எல்லாம், ஏதோ
இந்த வசனங்கள் எல்லாம் இல்லவே இல்லை என்பது போல், கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத
ஒரு தவ்ஹீத் போதனை நடந்திருக்கிறது. “அவர்கள் தன்ஸீஹை கிரகித்துக் கொண்டர், ஆனால்
தஷ்பீஹை விட்டுவிட்டனர்” என்று இப்னுல் அறபி சொல்வது போல் ஒரு தவ்ஹீதை அவர்கள்
உண்டாக்கிவிட்டனர். அல்லாஹ்வுடன் இணை வைக்கப்படுகின்றவற்றுக்கு மேலாக அவனை
உயர்த்தினார்கள், ஆனால் தனது பிரசன்னம் பற்றித் தனது நூலில் (திருமறையில்) அவன்
வெளிப்படையாகப் பிரகடனம் செய்திருக்கின்ற இந்த அசாதாரணமான எதார்த்தத்தை அவர்கள்
புரிந்துகொள்ளவில்லை.
நன்கு
அறியப்பட்ட ஹதீஸ் ஒன்றில் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) சொன்ன வாசகங்களின்
கருத்தாவது: “உங்களில் எவரும் தொழுகின்றபோது தனக்கு முன்னால் துப்ப வேண்டாம்.
ஏனெனில் அவரின் முன் வல்லமை மிக்க அல்லாஹ் இருக்கிறான்.” இதிலிருந்து, சீறாவின்
மாபெரும் சேகரிப்பாளரான அஸ்கலானி அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வை அர்ஷில்
மட்டுப்படுத்துகின்ற ஒருவனின் கொள்கையை இந்த ஹதீஸ் மறுத்துவிட்டது. இது அனைத்து
இடத்திலும் இருப்பதான சர்வவியாபகத்தை, நிராமயத்தை நிறுவுகின்றது.” இது மிகவும்
முக்கியமாகும். ஏனெனில், நாம் ஏற்கனவே நிறுவியிருப்பது போல், அவனுடன் எதனையும் இணை
வைக்க முடியாது, அவன் எதனையும் சார்ந்தவன் அல்லன், அவன் எவ்வடிவிலும்
கட்டுப்பட்டவன் அல்லன், ஆனால் அதே சமயம் நாம் இங்கே நிகழ்வுகளில் அவனது
பிரசன்னத்தின் வியப்பான வெளிப்பாட்டினை அடைந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்ல
அனுமதிக்கும் தவ்ஹீதை நாம் இப்போது விளங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.
வாருங்கள்,
சூரத்துல் வாக்கியா (56:83-87)-ஆம் திருவசனத்தைப் பார்ப்போம். இந்த ஆயத்துகள்
ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் பிரசன்னம் பற்றி, அல்லாஹ்வின் சாட்சியம் பற்றி,
மனிதர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது பற்றி
இன்னொரு பரிமாணத்தை நல்குகின்றன என்பதை நாம் காண்கிறோம். இப்போது, அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)வுடைய பிரசன்னத்தின் இந்த இயல்பு மேலும் அன்யோன்யமாகிறது,
மேலும் தீவிரமாகிறது.
(மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக்
குழியை அடைந்தால்,
அந்நிலையில் நீங்கள் பரக்கப் பரக்க
விழிக்கிறீர்கள்;
ஆயினும் உங்களைவிட நாம் அவனுக்கு மிக
நெருங்கியிருக்கிறோம்,
எனினும் நீங்கள் பார்ப்பதில்லை;
நீங்கள் கட்டுப்படுத்தப்படாதோராய்
இருந்தால்
நீங்கள்
மெய்யாளர்களெனில், அதனை மீள வைத்திருக்கலாமே?
மரணப்படுக்கையின்
அருகில் நிற்பவரை விட மரணிப்பவருக்கு அல்லாஹ் மிக நெருக்கத்தில் இருக்கிறான்.
ஆனால் உங்களால் பார்க்க முடிவதில்லை. இது மிகவும் தீவிரமான தருணம் – இறந்து
கொண்டிருக்கும் நபரின் பக்கத்தில் இன்னொரு நபர் நிற்பது. அத்தருணத்தில், இறந்து
கொண்டிருப்பவருக்கு அருகில் தான் இருப்பதை விடவும் அல்லாஹ் (சுப்ஹானஹு வ
த’ஆலா)வின் நெருக்கம் அவரிடம் அதிகம் என்பதை அந்த நபர் புரிந்து கொள்வதில்லை.
அவரால் அதைப் பார்க்க முடிவதில்லை. அந்தத் தருணத்தைப் போல், நீங்கள் எப்போதுமே
தெய்வீகப் பிரசன்னத்தின் விளிம்பில்தான் இருக்கிறீர்கள். அந்தக் கணம் ஒவ்வொரு
கணத்திலும் உண்மையே.
பிறகு,
அது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விதித்திருக்கிறோமோ, அந்த எமது
தீர்ப்புக்கு நீங்கள் ஏன் அடிபணியவில்லை? – ‘நீங்கள் சொல்வது உண்மை என்றால்’ –
அதாவது, காஃபிர் அதை எப்படிப் பார்க்கிறானோ அது உண்மை என்றால் – ‘மரணத்தின் இந்த
ஆணையை, மரணத்தின் விதியை, நீங்கள் ஏன் திருப்பி அனுப்புவதில்லை?’ அவன் சாக
வேண்டும் என்று அல்லாஹ் விதித்திருக்கிறான். இது, “காஃபிர் ஆகிய நீ கோரும் நிலை
உனக்கு இருக்கும் என்றால் நீ ஏன் ஆணையைத் திருப்பி அனுப்பக்கூடாது; ‘சாகாதே!’
என்று ஏன் சொல்லக்கூடாது?” என்று அல்லாஹ் கேட்பது போல் உள்ளது. வேறு வார்த்தைகளில்
சொல்வதெனில், மரணம் என்னும் நிகழ்வின் எதார்த்தத்தை மறுப்பதன் மூலம், மரணம்
என்னும் அந்த செயற்பாட்டில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் பிரசன்னத்தை நீ
மறுக்கிறாய். இதுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய புள்ளி. அல்லாஹ்வின்
பிரசன்னம் பற்றிய இந்த அறிவு அதை அறிபவனின் அனுபவத்தை மாற்றிவிடுகிறது.
நாம்
சூரத்துல் காஃப் (50:16)-ஆம் திருவசனத்துக்குச் செல்வோம். மீண்டும், இந்தத்
திருவசனத்தில் இரண்டு விடயங்கள் ஒன்றிணைவதைப் பார்க்கிறோம்.
திண்ணமாக யாமே மனிதனைப் படைத்தோம்
அவனிடம் அவனின் மனம் என்ன
கிசுகிசுக்கிறது என்பதை யாமறிவோம்
அவனின் பிடரி நரம்பினும் யாம் அவனிடம்
நெருங்கியுள்ளோம்.
மக்களுக்கு அல்லாஹ் எப்படித் தன் ரகசியங்களை வெளியாக்குகிறான்
என்று காண்மின்! அல்லாஹ் சொல்கிறான், “யாமே மனிதனைப் படைத்தோம்” அல்லாஹ் இந்தத்
தூலப் படைப்பையும் இருப்பின் ஒருங்கமைப்பையும் ஒன்றாக இணைத்திருக்கிறான் என்பதை
ஏற்கனவே நாம் புரிந்து கொண்டோம். குஃப்பாரும் கூட இதனை அறிவர். சூரத்துல் ஜுமர்
(39:38)-ஆம் திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
வானங்களையும் பூமியையும் படைத்தோன்
யார்?
என்று அவர்களிடம் நீங்கள் கேட்டால்
”அல்லாஹ்”
என்று அவர்கள் கூறுவர்.
அவர்கள்
பார்க்கத் தவறுவது எதை என்றால், (சூரத்துல் காஃப், 50:16):
”வ”
குர்’ஆனில் ஒவ்வொரு சொல்லும் பொருள்
குறித்ததுவே. ஒவ்வொரு சொல்லும் முக்கியமானதே.
திண்ணமாக யாமே மனிதனைப் படைத்தோம்
அது ’படைக்கப்படது’ என்பதினும்
‘கட்டமைக்கப்பட்டது’ என்று புரிந்து கொள்ளலாம். “யாமே மனிதனைக் கட்டமைத்தோம்;
மனிதனை உருவாக்கும் துகள்கள் அனைத்தையும் யாமே ஒன்று சேர்த்தோம்.” அடுத்து “வ”
என்னும் சொல் (வாவ் என்னும் அறபி எழுத்து) வருகிறது. கருவிலிருக்கும் குழவியின்
ரீதியில் நீங்கள் படைப்பைச் சிந்திக்க வேண்டும். அது துகள் துகளாக, துணுக்குத்
துணுக்காக, வடிவமைகிறது. முதலில் தோன்றும் உறுப்பு இதயம் ஆகும். அப்புறம்
அடுத்தடுத்த உறுப்புகள் எல்லாம் துகள் துகளாக உருவாகி ஒன்று சேர்கின்றன. “ஃகலக்னா”
என்பது இதுதான், நவீனப் புரிதலில் “கட்டமைக்கப்பட்டது” என்று கூறுவதை ஒத்தது.
எனவே,
“யாமே மனிதனைக் கட்டமைத்தோம்.” அடுத்த
துணுக்கு: “அவனிடம் அவனின் மனம் என்ன
கிசுகிசுக்கிறது என்பதை யாமறிவோம்.”
மனதின் குரல் என்பது மௌனக் குரலைப் போன்றது. ஏனெனில் அது படைப்பின் உள்ளே
இருக்கிறது. பிரம்மாண்டமான பிரபஞ்ச நிகழ்வைப் படைத்தவன் மனம் தனக்கே தான் என்ன
சொல்கிறது என்பதை, உன்னிடம் நீ சொல்லிக்கொள்வதை அறிகிறான் என்று அல்லாஹ்
சொல்கிறான். எனவே, அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் உன்னுடன்
ரட்சகனின் பிரசன்னம் உள்ளது. இதுதான் தவ்ஹீத்! இப்போது நீங்கள் தவ்ஹீதின் இயல்பு
என்ன என்பதைப் பார்க்க
ஆரம்பித்திருக்கிறீர்கள்.
அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா) நம் மனம் நின்றுவிடும்படி மேலும் ஒரு கட்டம் நகர்கிறான். அவன்
சொல்கிறான்:
அவனின் பிடரி நரம்பினும் யாம் அவனிடம் நெருங்கியுள்ளோம்.
”மிக நெருக்கம்” என்பதற்கு அவன்
“அக்ரப்” என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறான். ”அல்-கரீப்” என்பது அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)வின் திருநாமங்களுள் ஒன்று. அல்லாஹ்விடம் நெருக்கம் இருக்கிறது. அவனின் பிடரி நரம்பினும் யாம் அவனிடம்
நெருங்கியுள்ளோம். பிடரி நரம்பு என்பது உங்களுக்கு வாழ்வு தருவதாகும். பிடரி
நரம்பைத் துண்டித்துவிட்டால் நீங்கள் வாழ்வைத் துண்டித்துவிடுகிறீர்கள். “யாம் நெருங்கியுள்ளோம்” – இதில் யாம்
என்பது நேரடியாக சுயத்தைச் சுட்டுவது என்று ஸூஃபிகள் காண்கின்றனர். நாம் இங்கே
சுயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், சுயம் இல்லாமல் பண்புகள்
இருக்க இயலாது.
அல்லாஹ் பார்க்கிறான், அல்லாஹ்
கேட்கிறான் என்றால் அங்கே சுயமும் இருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில், அவன்
பகுக்கப்படவோ வகுக்கப்படவோ இயலாதவன். எனவே மீண்டும், இது கடந்த நூற்றாண்டில்
முஸ்லிம்களிடம் பரப்பப் பட்டிருக்கும் பொய்யான தவ்ஹீது போதனைக்கு முற்றிலும்
முரண்பட்டதாகும். அந்தப் பொய்ப் பரப்புதலின் விளைவாகத்தான் நாம் இப்போதிருக்கும்
இழிநிலையை, கொடுமையான நிலையை அடைந்திருக்கிறோம். நீங்கள் பெற்றிருக்கும் இந்த
அறிவு, இதை நீங்கள் எடுத்துச் சென்று போதிப்பது மட்டுமே உண்மையான குர்ஆனியக்
கல்வியை நிறுவும். அது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் வலுப்பமும் ஆற்றலும்
ஆகும். அதாவது, நம் காரியங்கள் அனைத்திலும் அவன் முழுமையாக இருக்கிறான் என்று
அர்த்தம். அந்தக் கோணத்தில், அல்லாஹ்வின் அடிமைகள் என்ற முறையில், அவன் என்ன
எதிர்பார்க்கிறான் என்பதை நாம் அறிவோம். இப்படித்தான் நம்மால் விடயங்களை மாற்ற
முடியும். ஏனெனில், நம்மிடம் இருக்கும் இந்த அறிவு, ஈமான் கொண்ட, அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)வின் மீது பரஞ்சாட்டுகின்ற மக்களின் வழியாக மாத்திரமே
வெளியாவதாகும்.
நாம் இப்போது ’சூரத்துல் பகரா’வை
அவதானிப்போம். அது இத்தகைய இயல்புள்ள விடயங்களால் நிரம்பியுள்ளது. சூரத்துல் பகரா
(2:186):
என் அடியார்கள் என்னைக் குறித்து
வினவும்போது,
நிச்சயமாக நான் அருகில் இருக்கிறேன்.
மீண்டும் அல்லாஹ்வின் திருப்பெயர் – ‘நிச்சயமாக நான் அருகில்
இருக்கிறேன்’ (ஃப-இன்னீ கரீப்). முஆவியா இப்னு ஜஃ’து சொன்னார்கள், “ஒருமுறை பதவீ
(நாட்டுப்புற அறபி) ஒருவர், அல்லாஹ்வுடன் தான் அன்யோன்யமாக உரையாடுவதற்கு அவன்
தனக்கு அருகில் இருக்கிறானா? அல்லது, கூக்குரல் இட்டு அழைப்பதற்கு அவன் தனக்கு
வெகு தொலைவில் இருக்கிறானா? என்று ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களிடம்
கேட்டார். ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக
இருந்தார்கள். அப்போது இந்தத் திருவசனம் அருளப்பட்டது. இது அந்த பதவீயின் வினாவுக்கான
விடையாகும்.
அழைப்போன் என்னை அழைக்கையில்
அந்த அழைப்புக்கு நான்
விடையளிக்கிறேன்
இப்போது நமக்கு ரகசியத்தின் இன்னொரு
துணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் இந்த நெருக்கம் என்பது செயலற்ற ஒன்றன்று.
அது இயங்குவதும், செயல்லூக்கமானதும் ஆகும். “அழைப்போன் என்னை அழைக்கையில் அந்த
அழைப்புக்கு நான் விடையளிக்கிறேன்.” இது அழகான ஒன்று. அவனை அழைப்போனை அல்லாஹ்
பதிலுக்கு அழைக்கிறான். இது பெருங்கருணையுள்ள தனது ரட்சகனுடன் ஓர் அடியான்
கொண்டிருக்கும் உறவாகும். இது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் கருணைக்கான ஓர்
அடையாளம் ஆகும்.
அழைப்போன் என்னை அழைக்கையில்
அந்த அழைப்புக்கு நான்
விடையளிக்கிறேன்
-அதாவது,
அவனை அழைக்கின்ற ஒருவனை, அல்லாஹ் அழைக்கிறான் – எனவே அல்லாஹ் அழைக்கிறான், அவனின்
அடியான் அல்ல.
இதிலிருந்து ஒரு முடிவு
எட்டப்படுகிறது:
எனவே, எனக்கே விடையளியுங்கள்,
மேலும் என்னையே நம்பிக்கை வையுங்கள்,
அவர்கள் நேர்வழி காட்டப்படுவதற்காக.
வேறு சொற்களில், இந்த அறிவு சரியான
இடத்தில் அமைந்தவுடன் – உண்மையில் இது அறிவிற்கும் மேலதிகமான ஒன்று, பொருட்கள்
எவ்வாறு இருக்கின்றன என்னும் விழிப்புணர்வு இது – அடுத்து, அந்நபர் அல்லாஹ்வும்கு
விடையளிக்க வேண்டும். “எனவே அவர்கள் எனக்கே விடையளிக்க வேண்டும், என்னையே நம்ப
வேண்டும்.” எனவே நீங்கள் அவனை நம்புகிறீர்கல், அவன் மீதே பரஞ்சாட்டுகிறீர்கள்.
ஏனெனில், அவனே விடையளிப்போன். அதை ஓர் உறவுநிலை என்று நான் சொல்ல மாட்டேன்.
ஏனெனில் அல்லாஹ்வுடன் உறவுநிலை என்பது கிடையாது. ஆனால், பொருட்கள் எப்படி
இருக்கின்றன என்பது பற்றிய அறீவின் மூலமாக இந்த சாத்தியமான எதார்த்தம் (மும்கினுல்
உஜூது) இருப்புக்கு வருகிறது. இவ்வழைப்பே நம்பிக்கையை (ஈமான்) உருவாக்குகிறது.
சூரத்துல் அஃ’ராஃப் (7:7) – இது இந்த
நிலையைப் புரிந்து கொள்வதில் இன்னொரு படிநிலை ஆகும்.
பிறகு நிச்சயமாக அறிவைக்கொண்டு
அவர்களுக்கு எடுத்துரைப்போம்;
யாம்
ஒருபோதும் மறைந்திருக்கவில்லை.
இது வந்து போகும் நிலையன்று, இது நிலையான ஒன்றாகும். கட்புல
எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கெல்லாம் இதுவே அடியோட்டமான அறிவாகும். இதைப்
புரிந்துகொள்ள வேண்டும்: அல்லாஹ் உங்களைப் பார்க்கிறான், அல்லாஹ் உங்களைக்
கேட்கிறான், அவன் ஒருபோதும் மறைந்தவனாக இல்லை.
அபூ மூசா அல்-அஷ்’அரி சொன்னார்கள்,
ஒருமுறை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது,
சகவாசி ஒருவர் தக்பீர் வாசகத்தை முழங்க ஆரம்பித்தார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ
சல்லம் சொன்னார்கள்: ‘மக்களே! உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு
குருடனையோ செவிடனையோ அழைக்கவில்லை. உங்களுக்குச் செவிமடுக்கும் ஒருவனை, உங்களைப்
பார்க்கும் ஒருவனை, உங்களுடன் இருக்கும் ஒருவனை நீங்கள் அழைக்கிறீர்கள். நீங்கள்
அழைக்கும் ஒருவன் உங்கள் ஒட்டகத்தின் கழுத்தை விட நெருக்கமாக இருக்கிறான்.” இது,
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் தமது சஹாபாக்களுக்கு தவ்ஹீதை
போதிப்பதாகும். இதுதான் கடந்த ஒரு நூற்றாண்டாக அறபிஸ்தானிலிருந்து வரும் இந்த
ஷைத்தான்களால் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆயத்துகளில் இருந்து நாம்
பார்க்கிறோம், என்ன நடக்கிறது என்பதை அல்லாஹ் பார்க்கிறான், அழைக்கின்ற ஒருவனுக்கு
அவன் செவிசாய்க்கிறான். உங்கள் பேச்சைக் கவனிக்கும் ஒருவனை, உங்களைப் பார்க்கும்
ஒருவனை, உங்களுடன் இருக்கும் ஒருவனையே நீங்கள் அழைக்கிறீர்கள். நீங்கள் அழைக்கும்
ஒருவன் உங்கள் ஒட்டகங்களின் கழுத்தை விட உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறான்.
”யாம் ஒருபோதும் மறைந்திருக்கவில்லை”
என்பதை சூரத்துன் நிசா’ (4:126)-வுடன் இப்போது நாம் தொடர்புறுத்துவோம்:
வானங்களில் இருப்பவையும் பூமியிலிருப்பவையும்
அல்லாஹ்வுக்கே உரியன;
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும்
சூழ்ந்தவனாக இருக்கிறான்.
நாம்
பார்த்த முந்தைய திருவசனத்தின் கருத்து இதில் முழுமை அடைகிறது. சூழ்நிலை முழுவதும்
அல்லாஹ்விடம் இருக்கின்றது. அல்லாஹ் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக
இருக்கிறான். அவன் ஒருபோதும் இங்கில்லாதவனாக இல்லை என்பது மட்டுமன்று, அவன்
அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான். சூரத்துல் அல்-அன்’ஆம் (6:103):
பார்வைகள் அவனை எட்டுவதில்லை;
ஆனால் அவனே பார்வைகளை எட்டுகிறான்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இந்த
வினாவைக் கொண்டு தொடர்ந்து குஃப்பாரிடம் சவால் செய்கிறான்: “எந்த அடிப்படையில்
நீங்கள் மறைவை மறுக்கிறீர்கள்? மறைவை மறுப்பதன் மூலம், உங்கள் மண்ணறைகளை விட்டும்
நீங்கள் எழுப்பப்பட்டு உங்கள் செயல்களுக்காக விசாரிக்கப்ப்படுவீர்கள் என்பதை
எப்படி உங்களால் மறுக்க முடிகிறது?” அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சூரத்துல்
ஃபுஸ்ஸிலத் (41:54)-இல் சொல்கிறான்:
அறிக, நிச்சயமாக இவர்கள்
தம் ரட்சகனின் சந்திப்பின் மீது
ஐயத்திலுள்ளனர்;
அறிக, நிச்சயமாக அவன் ஒவ்வொரு
பொருளையும்
சூழ்ந்தவனாக இருக்கிறான்.
இது மனிதனுடன் அல்லாஹ் ஒப்பந்தம் ஒன்றை
இட்டிருப்பது போல் இருக்கிறது. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான்: ‘இதை
மறுக்காதீர்கள். எப்படி இதை உங்களால் மறுக்க இயலும்?”
அல்லாஹ் சொல்கிறான்: “நிச்சயமாக
இவர்கள் தம் ரட்சகனின் சந்திப்பின் மீது ஐயத்திலுள்ளனர்.” இங்கே அவன் “றப்பு”
என்னும் சொல்லைக் கையாள்கிறான். றப்பு என்றால் ரட்சகன் என்று பொருள். இது அவன் தன்
படைப்பினங்கள் மீது ஆட்சி செலுத்துவதைக் குறிப்பதாகும். “அவர்கள் தம் ரட்சகனைச்
சந்திப்பதின் மீது ஐயம் கொண்டுள்ளனரா என்ன?” இதைத் தவிர்க்க முடியாது, இதை ஐயப்பட
முடியாது, இதை ஐயப்பட்டால் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று குர்ஆன்
வலியுறுத்துகிறது. ஏனெனில் ரட்சகனைச் சந்தித்தல் என்னும் இந்நிகழ்வு, மரணத்தின்
பின்னர் நடக்க இருப்பது, இறை இயல்பைப் புரிந்து கொள்வதற்கு தவிர்க்க முடியாததும்
இன்றியமையாததும் ஆகும். அந்த இறைவன் முழுப் பிரபஞ்சத்தையும் படைத்த ஒருவனாக
இருக்கிறான், குர்ஆன் வெளிப்பாட்டில், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்களின்
வழியாகப் பேசுவோனாக இருக்கிறான்.
சூரத்துத் தலாக் (65:12):
அல்லாஹ்தான் ஏழு வானங்களையும்
பூமியிலிருந்து அவை போன்றவற்றையும்
படைத்தான்;
அவற்றிடையே ஆணை இறங்குகின்றது,
அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றலுடையோன்
என்று நீவிர் அறிவதற்காக;
நிச்சயமாக அல்லாஹ் தன் அறிவினால்
அனைத்துப் பொருட்களையும்
சூழ்ந்திருக்கிறான்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இந்த
பூமியைப் படைத்தவன் என்பதாக மட்டுமல்லாது, முழுப் பிரபஞ்சத்தையும், ஏழு
வானங்களையும், பூமியின் ஏழு பகுதிகளையும் படைத்தவனாகத் தன் ஆற்றலைப் பற்றிப்
பேசுகிறான். அப்புறம் அவன் “அம்ரு” என்னும் சொல்லினைக் குறிக்கிறான். அது ”குன்”
என்பதில் இருந்து வருகிறது. பிரபஞ்சப் படைப்பிற்கான “குன்” என்னும் ஆணை அனைத்து
வானங்கள் மற்றும் பூமியின் ஊடாக இறங்குகிறது. இந்த அம்ரு சேணெடுந்தூரத்து
விண்மீன்களிடமும் செல்கிறது, சாலத் தொலைவுபட்ட பால்வீதிகளுக்கும் விண்மீன்
திரள்களிடத்தும் எட்டுகிறது, “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையோன்
என்பதை நீங்கள் அறிவதற்காக.”
இக்கட்டளை அனைத்துப்
படைப்புக்களினூடாகவும் வந்திருக்கிறது – வேறு விதத்தில் சொல்வதெனில்,
இக்கட்டளையின் ஒரு பகுதி என்னவென்றால், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின்
செய்தியைப் பெறுவதற்கும், அவன்தான் அதைப் படைத்தவன் என்பதை அறிவதற்கும், அல்லாஹ்
தன் அறிவில் அனைத்துப் பொருட்களையும் அடைய வளைந்திருக்கிறான் என்பதை அறிவதற்கும்
நீங்கள் இங்கே பூமியில் இருக்கிறீர்கள்.
அல்லாஹ் தன் அறிவில் அனைத்துப்
பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். மொத்தப் பிரபஞ்ச நிகழ்வையும் அவன் தன்
அறிவிலேயே உண்டாக்கியிருக்கிறான். ஆனால், பிரபஞ்சத்தின் காலத்தை அவன்
தொடர்ச்சியில் படைத்திருக்கிறான். அதன் ஆரம்பம், நிகழ்கணம் மற்றும் அதன் முற்றுதல்
வரை ஒவ்வொரு கணமும் அதனை அறிகிறான். ஒரு பிரபலமான நிகழ்ச்சியை நினைவு கூருங்கள்:
ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களிடம் சய்யிதுனா உமர் இப்னுல் ஃகத்தாப்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கேட்டார்கள், “நாம் முடிந்துவிட்ட ஒரு நிகழ்வில் இருக்கிறோமா?
அல்லது, இப்போதுதான் ஆரம்பமாகும் நிகழ்வில் இருக்கிறோமா?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி
வ சல்லம்) சொன்னார்கள், “தாள் எழுதப்பட்டுவிட்டது; மை காய்ந்துவிட்டது.” யவ்முல்
கியாமா வரை அனைத்து விடயங்களையும் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் இல்லை எனில்,
“அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் தன் அறிவில் அடைய வளைத்திருக்கிறான்” என்பது
உண்மையாக முடியாது.
இன்னொன்றையும் நினைவில் வையுங்கள்.
நம் புரிதலில் இருக்கும் காலம் என்பது படைப்புடன் நின்றுவிடும் ஒன்று. மீண்டும்
நாம் இங்கே சிந்தனையின் வரம்புகளுக்கு வந்துவிடுகிறோம். ஏனெனில், காலத்தைப்
படைத்தல் என்பது படைப்பாளனின் இயல்பில் உள்ளது. ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
அவர்கள் சொன்னார்கள்: “காலத்தை ஏசாதீர்கள், ஏனெனில் அல்லாஹ்தான் காலம்.” காலத்தைக்
குறிக்கும் இரண்டு சொற்கள் உள்ளன: ஜமான்
மற்றும் தஹ்ரு. இதன் அர்த்தம்
என்னவென்றால், அல்லாஹ்வே கணங்களிலான நிகழ்வுகளைப் படைப்பவனாக இருக்கிறான்,
காலத்தின் அளக்கப்பட்ட தொலைவை மட்டுமல்ல. அளக்கப்பட்ட காலத் தொலைவு என்பது உலக
அழிவுடன் தானும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் ஆணை நிகழும் கணம் என்பது
அல்லாஹ்விடம் இருந்து வரும்.
நாம் இப்போது மீண்டும் சூரத்துல் பகரா
(2:115)-ஆம் திருவசனத்தைப் பார்ப்போம். தவ்ஹீதை அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)
திறந்து காட்டுவதினுள் இன்னும் ஆழமாகச் செல்கிறோம்.
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே;
நீவிர் எத்திசை திரும்பினும்
அங்கே அல்லாஹ்வின் முகம்;
திண்ணமாக
அல்லாஹ் விசாலமானவன், பேரறிஞன்
மீண்டும் அறபியை நோக்குவோம்:
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே.
-எனவே
திசைகள் அல்லாஹ்வுக்கு உரியவை.
”ஃப-ஸம்ம” – அர்த்தம், “அந்த இடத்திலேயே” – அதற்கடுத்து உடனே
என்ன வருகிறது?
”வஜ்ஹுல்லாஹ்”.
அல்லாஹ்வின் முகம். இதில் இலக்கணம் இல்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? இது
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் வேத வெளிப்பாடு. அதில் இடைவெளி இல்லை, அதில்
எதுவும் சேர்க்கப்படவில்லை. ”நீவிர் எத்திசை திரும்பினும் – அங்கே அல்லாஹ்வின்
முகம்.”
அறிவு என்பது இது பற்றி ஒரு
முடிவெடுப்பதில் இருக்கிறது. இந்த உண்மை மிகவும் ஆழமானது, நுட்பமானது. ஒரு
காலத்தில் மிகப் பிரபலமான மஜ்தூப் ஒருவர் இருந்தார். சிலர் பள்ளிவாசலுக்குள்
போனபோது அவர் இங்கும் அங்கும் எங்கும் சிரம் பணிவதைப் பார்த்தனர். “நீ என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?” என்று அவர்கள் கேட்டனர். அவர் சொன்னார்:
”நீவிர் எத்திசை திரும்பினும் அங்கே அல்லாஹ்வின் முகம்”
அவருக்கு
அல்லாஹ்வின் மீது காதலின் பித்து ஏறியிருந்தது. அதனால், “அல்லாஹ்வின் முகம்
இருக்கிறது” என்று சொல்லியபடி அவர் வட்டமடித்துக் கொண்டிருந்தார்.
இதன் இரண்டு அம்சங்களை கவனியுங்கள்.
நீங்கள் குர் ஆனுக்குத் திரும்பினால், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) ரசூல்
(ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்கள் மீது இந்த நெருக்கமும் காதலும் அக்கறையும்
கொண்டு பேசுகிறான். அன்னாரிடம் அவன் சூரத்துல் பகரா (2:144)-இல் சொல்கிறான்:
(நபியே!) நிச்சயமாக யாம் உம் முகம்
வானத்தின் பக்கம் திரும்பக் காண்கிறோம்;
எனவே, நீர் பொருந்தும் முன்னோக்குத்
திசைக்கே
யாம் உம்மைத் திருப்புகிறோம்;
ஆதலால், மஸ்ஜிதுல் ஹராமின் திசையில்
உம்
முகத்தைத் திருப்புவீராக.
மக்காவின்
கிப்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். எனவே, ஒரு முஸ்லிம் கிப்லாவை எடுத்துக்கொள்கிறான்.
ஏனெனில், அதுதான் ஷரீஅத். ஷரீஅத் என்பது திசைப்படுதல் ஆகும். இது குறீத்து
அல்லாஹ்விடம் “ஏன்?” என்று நாம் கேட்க முடியாது. ஆனால், மக்காவை கிப்லாவாக
எடுத்துக்கொண்ட நிகழ்வு இஸ்லாமை மேலுயர்த்தி ஏனைய மதங்களை எவ்வாறு மறுப்பதாக
அமைத்ந்தது என்பதன் அர்த்தத்தை நான் சற்றே விளக்க முனைகிறேன். இல்லை எனில்
ஜெருசலேமை கிப்லாவாக எடுத்துக்கொள்ள நபிக்கு அனுமதியளித்திருப்பான். அது
ஜெருசலேத்தின் முடிவைக் குறிக்கிறது. இது கிப்லாவின் தீன் ஆகும். மேலும், அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா) முஃமின்களுக்கு மக்காவின் கிப்லாவை வழங்கியுள்ளான். என்வேதான்
இப்னு தைமிய்யா சரியாகவே சொல்கிறார்: “அல்-அக்ஸாவுடன் தொடர்புள்ள இபாதத்
(வழிபாட்டுச்) சடங்கு ஏதுமில்லை.” ஒன்று கூட இல்லை. அது தீனில் இல்லை. மிஃ’ராஜ்
என்னும் விண்ணேற்ற நிகழ்வால் மட்டுமே அது நமது நேசத்துக்கும் மரியாதைக்குமான இடமாக
இருக்கிறது. ஆனால், தீன் என்பது மக்காவின் சடங்குகளையே கொண்டுள்ளது.
இப்போது
நீங்கள் உங்கள் புரிதலில் இரண்டு உண்மைகளைத் தாங்குகிறீர்கள். ஒன்று, ஷரீஅத்திற்கு
வெளியில் இருக்கும் நிலையில், அல்லாஹ்வின் காதலைக் குடித்து போதை அடைந்திருக்கும்
ஒருவனால் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியதாகும். ஒரு மனிதன் பைத்தியமாக இருந்து ஒரு
குற்றத்தைச் செய்துவிட்டால் அவன் தண்டிக்கப் படுவதில்லை. அவனுக்கு மனநிலை
சரியில்லை என்று சொல்லிச் சிறையில் அடைக்கப்படுவான். ஆனால் மக்கள் சட்டத்தை மதிக்க
வேண்டும். அவர்கள் கிப்லாவை எடுக்க வேண்டும் என்பது இறைச் சட்டமாகும். நீங்கள்
அடிமைத்தனத்தில், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுக்கான உங்கள் உபூதிய்யத்தில்
கிப்லாவை ஏற்கிறீர்கள், ஏனெனில் இது பற்றி ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
அவர்களுக்கு வெளிப்பாடு அருளப்பட்டுள்ளது, இப்படித்தான் அல்லாஹ் நாம் அவனை வணங்க
வேண்டும் என்று விரும்புகிறான் என்பதை நீங்கள் அறியாவிடில் இது அறியாமைப்
பழக்கமாகத்தான் படும். நாம் அதைச் செய்கிறோம், அதே சமயம் நாம் எத்திசையில்
திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
முதகல்லிமூன்
மற்றும் ஸூஃபிகளின் கருத்துப்படி அல்லாஹ்வின் வஜ்ஹு என்று சொல்வது அல்லாஹ்வின்
சுயத்தைக் குறிப்பிடுவதற்கான ஒரு முறையாகும். அல்லாஹ்வின் முகம் என்றால்
அல்லாஹ்வின் சுயம். ஏனெனில் ஒரு நபரின் அடையாளமாக அமைவது அவரின் முகமே. முகமேதான்
அந்த நபர் என்பது போல் அது அடையாளப்படுகிறது. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே
அல்லாஹ்வின் சுயம் இருக்கிறது என்று பொருள். அல்லாஹ்வை அர்ஷ் என்னும் விதானத்தில்
மட்டுப்படுத்தி அவன் பூமியில் இல்லை என்று கூறுவோரின் கருத்துக்கு இதுவும் ஒரு
மறுப்பு ஆகும். குர்’ஆனிலிருந்து சில ஆயத்துகளை வைத்துக்கொண்டு, அல்லாஹ்வுக்கு
உறுப்புகள் உள்ளன, எனவே அவன் ஒரு நபர் என்று சொல்வோரின் கருத்தும் பொய்யே என்று
இது காட்டுகிறது. ”நான் இந்த மிம்பரில் (மேடையில்) இருந்து இறங்குவது போல அல்லாஹ்
தனது அர்ஷிலிருந்து இறங்குகிறான்” என்று இப்னு தைமிய்யா கூறினார் என்பது இப்னு
பதூதாவின் பிரபலமான அவதானக் குறிப்பு. அஸ்தக்ஃபிருல்லாஹ். நம்மைப் பொருத்தவரை இது
திடுக்கமான ஒரு கருத்தாகும்.
நாம்
இப்போது சூரத்துல் கஸஸ் (28:88)-ஐப் பார்ப்போம். இது முந்தைய ஆயத்துடன்
இணைப்பதாகும்.
மேலும், அல்லாஹ்வுடன் வேறு
எக்கடவுளையும் அழைக்காதீர்;
அவனை அன்றி வேறு தெய்வமில்லை;
அவனது முகம் தவிர அனைத்துப்
பொருட்களும் அழிபவையே;
தீர்ப்பு
அவனதே; அவனிடமே நீவிர் மீள்வீர்.
இங்கே
இருக்கிறது விஷயம். இதுதான் வகுக்கும் புள்ளி. மக்கள் உங்களிடம், “பிற
நம்பிக்கைகளுடனான உரையாடல்” என்று சொல்லும்போது, பிற நம்பிக்கை என்பதே கிடையாது,
ஏனெனில் அவர்களுக்கு இது தெரிவதில்லை. இது விவாதிக்கப்படவோ கலந்துரையாடப்படவோ
முடியாது. இது கீழ்ப்படிவதற்கானது. இது முஸ்லிம்களிடம் மட்டுமே இருக்கின்ற
அறிவு.மக்கள் அறிவை அடைய விரும்பினால் அவர்கள் தீனின் கஸ்ருக்குள் (கோட்டைக்குள்)
வரவேண்டும்.
மேலும்,
அல்லாஹ்வுடன் வேறு எக்கடவுளையும் அழைக்காதீர்; அவனை அன்றி வேறு தெய்வமில்லை; அவனது
முகம் தவிர அனைத்துப் பொருட்களும் அழிபவையே; தீர்ப்பு அவனதே; அவனிடமே நீவிர்
மீள்வீர். இதுதான்
முழுமையான ஒப்பந்தம்.
அவனது
முகம் தவிர அனைத்துப் பொருட்களும் அழிபவையே
காலநேரத்தில் இருக்கும் அனைத்தும் அழிகின்றன, காலநேரம்
அழிகிறது, அனைத்துப் பொருட்களும் அழிகின்றன. அழிகின்ற “அனைத்துப் பொருட்களுக்கு”
முன்னரும் நிகழிலும் பின்னரும் இந்த தெய்வீக எதார்த்தமே இருக்கிறது.
அல்லாஹ்வின் முகம் இருக்கிறது, ‘குன்’
என்னும் ஆணை வழங்கப்படுகிறது, பொருட்கள் உள்ளமைக்கு வருகின்றன, உள்ளமைக்கு வருவதன்
மூலம் அவை ஓர் நிகழ்கால வட்டத்துள் நுழைகின்றன. அவற்றின் ஆரம்பித்திலிருந்தே அவை
கணந்தோறும் கலைந்து அழிகின்றன. அவனின் முகம் தவிர அனைத்தும் அழிகின்றன. அவை
அனைத்தும் போன பின்பு – அல்லாஹ்வின் வஜ்ஹு. பொருட்களின் நிகழ்கால இயக்கம்
முழுவதும் முடிவுக்கு வருகிறது – அல்லாஹ்வின் வஜ்ஹு. எனவே அல்லாஹ் ஆதிக்கம்
செலுத்துகிறான். அவனேதான் இடத்திலும் காலத்திலும் எதார்த்தம் ஆக இருக்கிறான். இடம்
என்பது அவனின் ஆணைக்கு உட்பட்டுள்ளது, அவனின் பிரசன்னத்தின் கீழுள்ளது, காலமும்
அவனின் ஆணைக்கு உட்பட்டும் அவனின் பிரசன்னத்தின் கீழும் உள்ளது. இது இன்னோர் அறிவுடன்
இணைகிறது – அதாவது தீர்ப்பு அவனுக்கே உரியது. எது எது என்ன என்ன என்று அவனே
தீர்மானிக்கின்றான். அவனே பாகுபாட்டாளன்.
அதன் பின்னர் அன்யோன்யமான, நீங்கள்
சொல்வது போல், இருத்தலியச் செய்தி வருகிறது. நீங்கள் அவனிடமே மீட்கப்படுவீர்கள்.
வேறு விதத்தில் சொல்ல, நீங்கள் காலகதிக்குள் நுழைவீர்கள், அவன் பிரசன்னமாக
இருப்பான். நீங்கள் காலகதியில் முன்னகர்வீர்கள், அவன் பிரசன்னமாக இருப்பான்.
உங்கள் மரணப்படுக்கையில் உங்களுக்கு அருகில் இருப்பவரை விட அவன் உங்களிடம்
நெருங்கியிருப்பான். பின்னர் நீங்கள் மண்ணறைக்குப் போவீர்கள். அதன் பின்னர்
நீங்கள் அவனிடம் ஒப்படைக்கப் படுவீர்கள். அதுதான் பயணம். அதுதான் நிகழ்முறை.
சூரத்துர்
ரஹ்மான் (55:26-27):
அதிலிருக்கும் ஒவ்வொருவரும் அழிபவரே;
வன்மையும் வண்மையும் உடையோனாம் நும்
ரட்சகனின்
சங்கையான முகமே எஞ்சி நிலைத்திருக்கும்
”அதிலிருக்கும்
ஒவ்வொருவரும் அழிபவரே” – இதுவே உமது வாழ்வின் எதார்த்தம்.
நும்
ரட்சகனின் சங்கையான முகமே எஞ்சி நிலைத்திருக்கும்
அடுத்து
அது நம் ரட்சகன் யார் என்பதைச் சொல்கிறது:
வன்மையும் வண்மையும் உடையோன்
இந்த முழுச் சூழலுக்கும் தலைவனான அந்த
ஒருவன் வன்மை (வல்லமை) உடையவன், படைத்தலின் காரணமாக; அவனே வண்மை (வள்ளல் தன்மை)
கொண்டவன், படைப்புகளின் காரணமாக.
நீவிர் எக்காரியத்தில் இருப்பினும், குர்'ஆனிலிருந்து எதை ஓதினும்,
எவ்வினை செய்யினும் எமது
பார்வையிலேயன்றி
அதில் நீவிர் ஈடுபட்டிருப்பதில்லை;
துன்னணுவும் நும் ரட்சகனை விட்டும்
மறைந்ததன்று;
அதனின் பெரிதோ சிறிதோ தெளிவான
பதிவேட்டில் இல்லாமல் இல்லை
(குர்’ஆன்
10:61)
அவன்
உங்கள் மீது சாசியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலே அன்றி நீங்கள் ஏதெனும்
காரியத்திலாகவோ குர்’ஆனிலிருந்து எதனையும் ஓதவோ ஏதேனும் செயல்கள் செய்யவோ இல்லை.
இதுதான் எல்லா நேரங்களிலும் நிகழ்கிறது. இக்காரியங்களிலே நாம் பரபரப்பாக
இருக்கும்போது நம் மீது தான் சாட்சியாக இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான். ‘அதில்
பரபரப்பாக இருப்பது’ என்பதே இருத்தல். நீங்கள் அதனைச் செய்யும்போது அல்லாஹ்
உங்களைக் கண்காணிப்பதே எதார்த்தம். அதுவே கிழக்கின் மாபெரும் ஸூஃபியான ஸஹ்லுத்
துஸ்தரி அவர்களின் வழமையோதல் (விர்து):
அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்
அல்லாஹ் என்னைப் பார்க்கிறான்
அல்லாஹ்
என் செயல்களைக் கண்காணிக்கின்றான்
அல்லாஹ்
வள்ளல் தன்மை கொண்டவன் என்பதில் ஏதேனும் ஐயப்பாடு எழுகிறது எனில் அல்லாஹ்
சொல்கிறான்: “விண்ணிலோ மண்ணிலோ துன்னணுவும் உம் ரட்சகனை விட்டு மறைந்ததன்று.”
பூமியிலோ வானத்திலோ அவன் அறியாமல் ஓர் அணுவும் இல்லை. “அதனினும் பெரிதோ சிறிதோ
தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இல்லை.” வேறு விதத்தில் சொல்வதெனில், படைப்பு
முழுவதையும் குறிப்பதற்கு அல்லாஹ் இங்கு பயன்படுத்தும் உவமை இந்தப் பெருநூல்
ஆகும். அதைப் பற்றியே ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) சொன்னார்கள்: “ஏடு
எழுதப்பட்டுவிட்டது, மை காய்ந்துவிட்டது.”
இதனால்தான்,
காரியங்களைத் தாமே எப்படியோ நிகழ்த்துகிறோம் என்பது போல் முஸ்லிம்கள் தற்கொலை
செய்துகொள்ள முடியாது. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் இருப்பைக் குறித்து
அவர்கள் படு பிணக்கில் இருக்கின்றனர். அத்தகைய ஒரு காரியத்தைச் செய்ய அவர்களுக்கு
அனுமதி இல்லை; இறைவனை வணங்கும்படிதான் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது, தம்மை
மாய்த்துக் கொள்ள அல்ல, அது தடை செய்யப்பட்டதாகும். அவர்களுக்கு ஏற்கனவே ஆணைகள்
உள்ளன – அல்லாஹ்வை அஞ்சுங்கள், பகைவர்களை அல்ல! தாம் மரணத்தை அஞ்சவில்லை என்றூ அவர்கள்
சொல்வதில்கூட பயனில்லை. ஏனெனில், மரணத்தில் நிகழ்வது அஃதன்று. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) ஏற்கனவே
கூறியுள்ளான்: நீவிர் இறக்கும்போது , நீங்கள் மரணிப்பதைப் பார்த்தபடி அருகில்
இருப்பவனை விட அல்லாஹ் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறான். இத்தகையவனைத்தான்
நீங்கள் அஞ்ச வேண்டும். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான்: “தெளிவான பெருநூலில் இல்லாத எதுவும் இல்லை.” ஒரு
முஃமினின் பார்வைக் கோணத்தில் இது என்ன என்றால், “அல்ஹம்துலில்லாஹ்” நாம்
பாதுகாப்பாக இருக்கிறோம். நம் இருப்பின் அடித்தளங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.
நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பாக இருக்கிறோம்.” பின்னர், நீங்கள் பாதுகாப்பாக
இருப்பதை அறிந்தபடி நீங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். பல்வேறு படித்தரங்களில்
குர்’ஆன் பேசுகின்ற யகீன் என்பது இதுதான்.
இப்போது
நாம் சூரத்துல் ஃபுஸ்ஸிலத் (41:53-54)-ஆம் திருவசனத்தை நோக்குவோம். இப்புள்ளியை
விளங்கிக் கொள்ளாத மூடர்களை நோக்கி அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சவால் விடுகிறான்!
தவ்ஹீதின் இந்த அறிவு உங்களிடம் இல்லை எனில் வாழ்க்கை என்றால் என்ன என்றே
உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வெறும் சிரமமும் அழிவும்தான் உண்டாக்குவீர்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:
விரைவில் தொடுவானிலும்
அவர்களுக்குள்ளேயும்
நாம் எமது அடையாளங்களைக்
காண்பிப்போம்,
அவனே சத்தியம் என்பது அவர்களுக்குத்
தெளிவாகும்வரை;
உம் ரட்சகன், அவன் அனைத்துப்
பொருட்களின் மீதும்
சாட்சியாக இருக்கிறான் என்பது
உமக்குப் போதுமல்லவா?
அறிக! இம்மக்கள் தம் ரட்சகனைச்
சந்திப்பது பற்றி ஐயத்திலுள்ளனர்;
அறிக! நிச்சயமாக அவன் அனைத்துப்
பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்.
(குர்’ஆன்
41:53-54)
இது நாம் முன்பு கண்ட திருவசனத்துடன் இயைகிறது. “நாம்
அவர்களுக்கு நம் அடையாளங்களைத் தொடுவானில் காட்டுவோம்” அதாவது இந்தப் புறவுலகில்,
“மேலும் அவர்களுக்கு உள்ளேயும் காட்டுவோம்.” அதாவது, கடந்த சில மணிநேரங்களாக நாம்
அவதானித்து வரும் இந்தப் பொருண்மையை அல்லாஹ் உங்கள் வாழ்நாளிலேயே, அங்கே வெளியே
என்ன நடந்து கொண்டிருக்கிறது, இங்கே உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை
உங்களுக்கு உணர்த்துவான். இவை எல்லாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் ஆற்றலின்
அத்தாட்சிகள் ஆகும். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுடைய ஆற்றலின் அத்தாட்சிகள்
யாவை? நீங்கள் தேவையுடைன் அவனைச் சார்ந்திருக்கிறீர்கள் அவன் தேவைகள் ஏதுமற்றுத் தனித்திருக்கிறான்
என்பதை நீங்கள் கண்டு கொள்வதுதான். நீங்கள் தேவையுடையோர், அவன் வழங்குகின்ற
ஒருவன். எனவே வேறெதுவும் உங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில் அவன் உங்களுக்கு
வழங்குவான். “அதுவே சத்தியம் என்பது அவர்களுக்கு ஊர்ஜிதமாகும் வரை தனது
அடையாளங்களைத் தொடுவானிலும் அவர்களுக்கு உள்ளேயும் காட்டுவான்.”
உம் ரட்சகன், அவன் அனைத்துப்
பொருட்களின் மீதும்
சாட்சியாக
இருக்கிறான் என்பது உமக்குப் போதுமல்லவா?
இதுதான்
கருதப்படவேண்டிய அறிவு. அவனே அனைத்துப் பொருட்களின் மீதும் சாட்சியாக இருக்கிறான்
என்பது ஓர் அனுபவ அறிவு. இதுவே தவ்ஹீதின் எதார்த்த அடித்தளம். அல்லாஹ் (சுப்ஹானஹு
வ த’ஆலா) பின்னர் நமக்குச் சொல்கிறான்:
அறிக! இம்மக்கள் தம் ரட்சகனைச்
சந்திப்பது பற்றி ஐயத்திலுள்ளனர்;
அறிக!
நிச்சயமாக அவன் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்.
இதுதான்
குஃப்பார் மட்டும் முஃமினூன் ஆகியோரிடையே பிரிக்கும் கோடு. முஃமினூன் என்போர் தமது
ரட்சகனைச் சந்திப்பதில் எவ்வித ஐயமும் அற்றோர். அதுதான் அத்தாட்சியும் ருஜுவும்
ஆகும். ஏனெனில் அவன் அவர்களின் வாழ்நாள் நெடுகிலும் புறவுலகிலும் அவர்களின்
அகத்திலும் அதை உறுதிப்படுத்தும் அடையாளங்களை வழங்கியிருக்கிறான். ஹஜ்ஜு என்பது
அதற்காகத்தான். அது தொடுவானிலான ஓர் அடையாளமாகும். ஏனெனில் நீங்கள் முஃமினூன்களைப்
பார்க்கும்போது [அரஃபாத்தில் சந்திக்கும்போது], கஃபாவிலான தொழுகை இல்லை, அல்லது
மினாவில் உள்ள இறந்தோருக்கான தொழுகையும் இல்லை.
ஹஜ்ஜு
என்பது தொடுவானிலான அடையாளமாகும். உங்களுக்கு உள்ளேயும் அடையாளங்கள் உள்ளன.
ஏனெனில், நீங்கள் எவரிடமும் சொல்ல முடியாத அடையாளங்களை ஹஜ்ஜில் அல்லாஹ்
உங்களுக்குள் போடுகிறான். கோடிக்கணக்கான ஹாஜிகள் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும்
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கே ஆன ரகசியம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவருக்கும்
அவர்கள் வெளியே சொல்லாத ஏதோவொரு அனுபவம் நடந்திருக்கிறது. இதுதான் தொடுவானிலும்
அவர்களுக்குள்ளேயும் ஆன அடையாளம். எனவே அவர்கள் தம் ரட்சகனைச் சந்திப்பது குறித்து
ஐயத்தில் இல்லை. அது ஆளையே மாற்றிவிடுகிறது. தன் ரட்சகனைச் சந்திப்பதில் ஐயமே
இல்லாத ஒருவருக்குத் தெரியும்: “அவன் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருப்பவன்
அல்லவா?” இதைத்தான் “ஹள்ரத்துர் ரப்பானி”, ரட்சகத்தன்மையின் பிரசன்னம் என்று
ஸூஃபிகள் அழைக்கின்றனர். தீவானைப் பாடியபடி இதயம் அசைய ஆரம்பிக்கிறது. கல் போல்
இருந்த அது கண்ணாடி போல் ஆகிவிடுகிறது. அதன் ஊடாக ஒளிகள் பாய ஆரம்பிக்கின்றன.
அதுதான் அல்லாஹ் நம்முடன் எப்போதும் இருக்கிறான் என்பது. அதைக்கொண்டு இதயம்
நிரம்பி விடுகிறது. விழிகள் கண்ணீரால் நிரம்புகின்றன. வெளியே தொடுவானம் வரை உள்ள
அனைத்தும் இதயத்தின் உள்ளே இருப்பவையுடன் கலந்துவிடுகின்றன.
இதுதான்
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் சுயத்தில் இருந்து திக்ருடையோரின்
(தியானிப்பவர்களின்) மீது வரும் வெளிச்சங்களான தஜல்லியாத் என்பதன் ஆரம்பம்.
இதற்காகத்தான் நாம் கூடுகிறோம். நமது கூடுகையின் நோக்கமே இதுதான். இந்த அறிவுக்
கருவி நம்மிடம் இதயத்தின் நேரடியான நிலைகள் ஆகிவிடுகிறது. தஸவ்வுஃப்
(ஸூஃபித்துவம்) என்பது இதுதான். தரீக்கா என்பது இதுதான். அல்லாஹ் (சுப்ஹானஹு வ
த’ஆலா) பற்றிய நமது அறிவு மற்றும் குர்’ஆனைப் பற்றிய நமது புரிதல் ஆகியவற்றின்
காரணமாக நாம் நமது இதயத்தில் இந்த ஒளிகளை அனுபவிக்க இயலுகிறது. இந்த அறிவு
இல்லாமல் திக்ரில் நீங்கள் இந்த ஒளிகளை அனுபவிக்க முடியாது. மவ்லாயீ அல்-அறபி
அத்-தர்க்காவி சொன்னார்கள், “என் பரவசம், என் போதை ஆகியவை பிரசங்கத்தில் உள்ளன,
ஹத்ராவில் அல்ல.”